Tuesday, November 25, 2008

நிஜமான அங்கீகாரம்!


உலகத் தமிழர் நெஞ்சங்களில் ரஜினி!


அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற சஸ்பென்ஸ் வைப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான். அந்த சஸ்பென்ஸைத் தாங்க முடியாத குழப்பத்தில் நமது மீடியாக்கள் உளரும் உளறல் இருக்கிறதே அது கவுண்டர் காமெடியையும் மிஞ்சுபவை.இலங்கைத் தமிழர் உண்ணாவிரதத்துக்கெல்லாம் ரஜினி எங்கே வரப்போகிறார் என்று கூறி வந்தார்கள். அவரோ வந்ததோடு மட்டுமல்ல... எல்லோரும் வாடி வதங்கிக் கிடந்தபோது, அவர் மட்டும் மாலை உண்ணாவிரதம் முடியும்வரை விசிறி சாமியார் மாதிரி பிரஷ்ஷாகவே உட்கார்ந்திருந்தார். அலங்காரச் சொற்கள் எதையும் பயன்படுத்தாமல், உள்மனம் சொன்னதை மேடையில் முழங்கிவிட்டுப் போக, அது உலகமெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.இன்னும்கூட பல ஈழ ஆதரவு ஊடகங்களில் அவரது பேச்சு பிரதானமாக இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. போர்முனையில உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிற தமிழர்களுக்கு இந்த மாதிரி ஒரு அவதார மனிதரிடமிருந்து கிடைத்துள்ள தார்மீக ஆதரவு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.அந்த பரபரப்பு அடங்கும் முன்பே, தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை (கவனிக்க: பிறந்த நாளை அவர் கொண்டாடுவதில்லை. ரசிகர்களாகத்தான் கொண்டாடுகிறார்கள்) ரத்து செய்யச் சொல்லி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையால் இலங்கை மக்களுக்கு அமைதி கிடைத்திட தூண்டுதலாக இருந்தால் மகிழ்வேன் என்றும் விளக்கம் அளிக்க, அரசியலுக்கு வராமலேயே உலகத் தமிழர்களின் இதயங்களில் சூப்பர் ஸ்டார் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் ‘தலைவராக’!இப்படி ஒரு நல்லவர்தான் நாட்டுக்கு வேண்டும், என்ற பேச்சுக்கள் இப்போது ‘ரஜினி விமர்சகர்கள்’ வாயிலிருந்தே வெளிவரத் துவங்கி இருப்பதுதான் ‘தலைவர்’ ரஜினிக்குக் கிடைத்துள்ள நிஜமான அங்கீகாரம். இதுகுறித்த தொடர்ச்சியான பதிவுகள் நமது வலைதளத்தில் அணிவகுக்கவிருக்கின்றன, விரைவில்!அவரது ஒற்றைச் சொல்லுக்கு இத்தனை மரியாதையும், ஆளுமையும் இருக்கிறதென்றால், அவர் செயலில் இறங்கினால்...-இந்தக் கேள்வியும் அதன் முடிவாகக் கிடைக்கிற பதிலும் நடுநிலையாளர்களை, நல்ல மாற்றத்துக்குக் காத்திருப்பவர்களை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.

No comments: