


சில தினங்களுக்கு முன் சுப்பிரமணியன் எனும் ரசிகர் ஒரு இப்படி பின்னூட்டமிட்டிருந்தார் நமது தளத்தில்...“தலைவரை எதிர்த்த அசுரர்கள் ஒவ்வொருவரும் இப்போது மீண்டும் அவரைத் தேடி வந்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்...” என்று அதில் குறிப்பிட்டிருந்தார் அந்த ரசிகர்.உண்மைதான்... ரஜினி எனும் நல்லவருக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட சில அசுர சக்திகளே இப்போது அவருக்கு வெண்சாமரம் வீசத் தொடங்கியிருக்கின்றன.ஆனால் இவற்றைப் பார்த்து அவரும் மயங்கிவிடவில்லை... அவரது ரசிகர்களும் அசந்துவிடவில்லை.ரஜினி மீதான காரணமற்ற விமர்சனம், தனிநபர் தாக்குதல் எவர் வாயிலிருந்து வெளிப்பட்டாலும் அதைச் சகித்துக் கொள்ளமாட்டோம். அதே நேரம் அவரது புகழ்பாடும் எந்த விஷயத்தையும் புறக்கணிக்கவும் மாட்டோம் என்ற அடிப்படையில் அந்த அசுர சக்திகளின் தடுமாற்றத்தையும் முன்பு எழுதினோம், இப்போது மனமாற்றத்தையும் பதிவு செய்கிறோம்.சத்யராஜ், ராமதாஸ் வரிசையில் இப்போது சீமானும் சேர்ந்திருக்கிறார்.முன்பு குசேலன் பிரச்சினையின் போது ரஜினியை ஆதரித்த நால்வருள் இவரும் ஒருவர். ஆனால் சொல்பவர் பேச்சைக் கேட்டு, என்ன நடந்தது என்று புரியாமலே ரஜினியை விமர்சித்தார்.இப்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ரஜினியின் பேச்சு அவரது மனசாட்சியை உலுக்கிவிட்டது போலிருக்கிறது.ஈழத் தமிழர் விவகாரத்தில் ரஜினியின் தெளிவான பார்வை இந்தியாவுக்கு இல்லாமல் போனது துரதிருஷ்டம்தான் என்று தனது அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார்.ஈழ மக்களின் போராட்டத்துக்கு முன்னிலும் வலு கூடியிருக்கிறது. அதே போல தாய்த் தமிழகத்தில் அவர்கள் மீதான பார்வை மாற ரஜினி மற்றும் கமலின் பேச்சுக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன, என்கிறார் சீமான்.
ரஜினியின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டுக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருப்பது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனிடமிருந்து. கலைத்துறையைச் சேர்ந்தவர்களை அவர் அத்தனை சுலபத்தில் பாராட்டுபவரில்லை.அவர் இப்படிக் கூறுகிறார்:“பொதுவாகவே எனக்கு சினிமாக்காரர்களின் போராட்டங்கள் மீது பெரிய மரியாதை கிடையாது. பிரச்சினைின் ஆழம் மறக்கடிக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சமே முன்னால் வந்து நிற்கும்.ஆனால் அன்றைய உண்ணாவிரதம் ஒரு நல்ல விதிவிலக்கு. எனக்குத் தெரிந்து ரஜினிகாந்தின் நிலைப்பாடுதான் சரியானது. பிரச்சினையை எத்தனை ஆழமாக அணுகுகிறார் அவர் என்பதற்கு இந்தப் பேச்சு சான்று. அவர் ஆன்மீக அடிப்படையில் பேசினாலும் அதில் அறிவியல் இருந்தது. ஈழ மக்களின் சார்பில் அவருக்கு பாராட்டுக்கள்.என் கோபமெல்லாம்... இந்த பரந்த சிந்தனை கலைஞருக்கு இல்லையே என்பதுதான். கடைசி வரை தன் இனத்தையே அடகு வைத்து அரசியல் லாபம் பார்க்கிறாரே கருணாநிதி என்பதுதான்... ரஜினி போன்ற ஒரு நல்ல கலைஞருக்கு தமிழின வரலாற்றில் நிச்சயம் இடமுண்டு; ஆனால் இந்தக் கலைஞரை (கருணாநிதி) வரலாறு மன்னிக்காது, எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சிவக்குமாரைச் சந்திக்க நேர்ந்தது. உண்ணாவிரதத்தில் ரஜினியின் பேச்சு, ரசிகர் சந்திப்பு, அரசியல் குறித்த அறிவிப்பு என அடுத்தடுத்த ரஜினியின் நகர்வுகள் தனக்கு எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை என்றார் அவர்.“ரஜினி சொன்னது போல, அரசியலில் ஒரு அரிய வாய்ப்பினை மூப்பனார் தந்த போதும், அதை மறுத்தவர் ரஜினி. முன்னெப்போதும் பார்த்திராத ஒரு தீர்க்கதரிசி இப்போது ரஜினிக்குள் தெரிகிறார். இந்த மாதிரி மனிதர்கள் அபூர்வமானவர்கள். தனக்கென்று எந்த அதிகாரத்தையும் வேண்டாதவர்கள். அவரது பாபா படத்தின் அடிநாதமே அதுதான்.ஆனால் இந்த பக்குவப்பட்ட நிலைக்கு அவர் மெனக்கெட்டு தயார்படுத்திக் கொண்டார் என்று சொல்லமாட்டேன். இது இயல்பாகவே அவருக்கு அமைந்திருக்கிறது...” என்றார்.‘அதான் முன்பே சொன்னோமே சார்... அவர் சாதாரண மனிதரல்ல... வரம் வாங்கி வந்தவரென்று!’ என சொன்னபோது, நம் கண்களை ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சிரித்தார் சிவக்குமார்.
No comments:
Post a Comment