
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு... போன்ற தலைவர்கள் களத்தில் நேரடியாக இறங்கி போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு பகிரங்கமாக ஆதரித்து களத்தில் இறங்காவிட்டாலும், மானசீகமாக ஆதரவளித்தவர்கள் ஏராளம். இவர்களிடமிருந்து மாறுபட்ட வேறுவழிகளில் தங்கள் சுதந்திர உணர்வைக் காட்டிய தலைவர்களும் உண்டு.அதனால் அவர்கள் தேச விரோதிகாளாகச் சித்தரிக்கப்பட்டார்களா... அல்லது கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும் இல்லையென்று ஆகிவிட்டதா...-இந்தக் கேள்வியை வாசகர் ஒருவர் கமெண்டாக எழுதியிருந்தார் ஒரு இணையதளத்தில், ராமேஸ்வரம் போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்கள் குறித்த (குறிப்பாக ரஜினி, கமல்) பாரதிராஜாவின் பேட்டிக்கு.இந்தக் கருத்தில் உள்ள உண்மைகளை ஏதோ நமது வசதிக்காக மட்டும் நியாயப்படுத்தாமல், எல்லாருக்கும் பொதுவாக வைத்து அலசிப் பாருங்கள்.ராமேஸ்வரம் போராட்டத்தில் ரஜினியும் கமலும் இதர நடிகர்களும் பங்கேற்கவில்லை. இதனால் அவர்கள் தமிழ் உணர்வு அற்றவர்கள் என்று முடிவு செய்துவிட முடியுமா... எந்த ஒரு பிரச்சினை குறித்தும் இன்னார் இப்படித்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. ராமேஸ்வரத்துக்குப் போய் போராட்டம் நடத்துவதில் தெரியும் உணர்வு, சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் மட்டும் இலலாமல் போய்விடுமா...இலங்கைத் தமிழர் பாதிக்கப்படுவதற்கான கண்டனங்களைப் பதிவு செய்யும் கலைஞர்களுக்கு ஆதரவாக ரஜினி ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாமே என பாரதிராஜா கோபப்பட்டிருந்தார்.பாரதிராஜாவின் கோபத்திலுள்ள நியாயத்துக்கு இணையான நியாயம் ரஜினியின் அமைதியிலும் இருக்கலாமல்லவா...இதை பாரதிராஜா உணர்வுப்பூர்வமாக பார்க்கிறார். ஆனால் ரஜினி போன்றவர்கள் அப்படி உணர்ச்சிவசப்பட்டு சர்வதேச பிரச்சினைகளில் ஒரு நிலைப்பாட்டினை எடுத்துவிட முடியாது.ராமேஸ்வரம் பிரச்சினையில் பங்கு கொண்ட கலைஞர்கள் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் எல்லை மீறிப் பேசினார்கள். அந்த மாதிரி கொந்தளிப்பான ஒரு கூட்டத்தில் யாரும் யாரையும் அடக்கிக் கொண்டிருக்க முடியாது. அப்படியொரு சூழலில் யார் யாரோ முறை தவறிப் பேசுபவற்றுக்கு ரஜினி போன்றவர்கள் அல்லவா விளக்கம் சொல்ல வேண்டிவரும்!இன்னொன்று, இலங்கைப் பிரச்சினைதான் என்றில்லை... திரையுலகினர் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ரஜினி எப்போதும் நடுநிலையாகவே நடந்து கொண்டுள்ளார். கடைசியாக நடந்த ஒகேனக்கல் உண்ணாவிரதப் பேராட்டத்தின் போது கூட உதைக்க வேண்டாமா? என்று அவர் கூறியது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பயன்படுத்திய ஒரு வார்த்தைதான்.ஆனால் அதற்கே அவரைக் கூண்டிலேற்றிவிட்டார்கள். ஆனால் ‘கன்னடக்காரன் மனைவியரையும்’ இதில் இழுத்து ஆபாசமாகப் பேசிய நபர்களுக்கு தமிழுணர்வாளர் என்று பட்டமளித்து கவுரவித்துவிட்டனர் நம்மவர்கள்.ரஜினி போன்றவர்களை வரவிடாமல் தடுப்பது இபடிப்பட்ட செயல்கள்தான். மற்றபடி அவருக்கும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் அக்கறையுண்டு. தனது எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர் அதை பகிரங்கமாகச் சொல்லத் தயங்கியதில்லை.‘தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாழ்க்கை நிலை நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கர்நாடகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, இலங்கையில் துன்பப்படுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி.. இன்னும் உலகில் எஙஅகெல்லாம் தமிழர்கள் பரவியிருக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நடைபெறும் எந்த செயல்களும் கண்டிக்கத்தக்கவையே...”, இது முன்பு ஒருமுறை ரஜினி அளித்த பத்திரிகைப் பேட்டி.கொடுத்த வாக்கையும், கொடுத்த பொருளையும் எப்பவும் திரும்ப வாங்க மாட்டேன் (இது அவரோட சினிமா வசனம் இல்லை... 1996 தேர்தலின் போது அவர் பிரயோகித்த சொந்த வசனம்தான்...) என்பது ரஜினியின் கொள்கை. இலங்கைத் தமிழர் விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக எப்போதோ காட்டிவிட்டார் ரஜினி.இப்போதும் அவசியமேற்பட்டால் இலங்கைத் தமிழர் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தத் தயாராகவே உள்ளார். அதனால்தான் தன்னை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட நடிகர் சங்கம் மீண்டும் அழைத்தபோதும் மறுக்காமல் உண்ணாவிரதத்துக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினி.எனவே தேவையில்லாமல் அவரையும் அவரைச் சார்நத சமூகத்தையும் சீண்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அடுத்த கட்டப் பணிகளைப் பாருங்கள்.
No comments:
Post a Comment