ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்
அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பொன்மனச் செல்வன் ஆகிய படங்களைத் தயாரித்த, 'தாயம் ஒண்ணு' படத்தைத் தயாரித்து இயக்கிய பீட்டர் செல்வகுமார் ஆரம்பத்தில் கதாசிரியராக இருந்தவர். 'மூன்று முகம்' படத்தின் கதாசிரியர் அவரே. பீட்டர் செல்வகுமார் ரஜினியைச் சற்று வித்தியாசமாக நமக்கு அறிமுகம் செய்கிறார். ரஜினியை விட நான் வயதில் மூத்தவன் என்றாலும் 'ரஜினி சார்' என்பேன். அதற்கு அவர், "ரஜினி என்று சொல்லுங்கள் போதும். ஏன் 'சார்' போடுகிறீர்கள்?" என்று தன் சங்கடத்தைத் தெரிவித்தார். "சார் போட்டு அழைக்குமளவிற்கு தகுதியுடையவர் நீங்கள்" என்றேன். இப்போதும் நான் அவரை அப்படித்தான் அழைக்கிறேன்.''ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் 'பைரவி'. அதில் நான் வசன உதவியாளராக இருந்தேன். வேகமாக வசனம் பேசும் ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. 'Time is Money' என்பதைப் போல் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர் ரஜினி. அந்த உணர்வு ரஜினியிடம் இன்றைக்கும் உண்டு. அப்போதே ரஜினியிடம் உயர்வு, தாழ்வு மனப்பான்மையெல்லாம் கிடையாது. தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் அவர். ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவே பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 'பைரவி'யில் ரஜினிக்கு எதிரான வில்லன் வேடம் அவருக்கு. ரஜினிக்கு அது சங்கடம்தான். தன்னைவிட சீனியரான ஸ்ரீகாந்துக்கு மதிப்பளிக்க வேண்டி, படப்பிடிப்புக்கு வந்து அவர் முதலில் வேண்டிக் கொண்டது. "டைட்டிலில் ஸ்ரீகாந்த் சார் பெயர் முதலில் வரட்டும். என் பெயர் அடுத்து வந்தால் போதும்" என்பதைத்தான். ரஜினியின் இந்த சினிமா தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் மீது அதிக மதிப்பும், அன்பும் கொள்ளச் செய்தது. 'பைரவி' முதல் கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸில் ஆரம்பமானது. கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு ரஜினி ஸ்ரீகாந்தை விரட்டுவது மாதிரி காட்சி. அதற்காக கண்ணாடி முன் நின்று சவுக்கை கழுத்தில், இடுப்பில்..... இப்படிப் பலவிதமாக சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி. அதையெல்லாம் பார்த்து 'ரஜினி என்ன இப்படிக் கிறுக்குத்தனமாக செய்கிறார்' என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் அவர் ரசிக்கும்படியாகச் செய்தபோதுதான் என் தவறை உணர்ந்தேன். முதலாளி ஸ்ரீகாந்திடம் விசுவாசமாக இருக்கிறார் ரஜினி. ஆனால் அதே முதலாளி தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவன் என்று அறியும் போது ஆவேசத்துடன், "நீ சுட்டு விரலைக் காட்டினப்ப நான் வேட்டை நாய் மாதிரி பாய்ஞ்சேன்" என்று சொல்வார். நான் ரஜினியிடம் அந்த வசனங்களைச் சொல்லி, சொடக்கு போட்டுக் காண்பித்த போது, "இப்படிச் செய்தால் சிவாஜி சார் மாதிரி இருக்குமே" என்றார். நான் அதற்கு "உங்களது வசனம் பேசும் வேகத்தில் சிவாஜி சார் சாயல் வராது" என்றேன். அதை ரஜினி ஒத்துக் கொண்டார். படத்தில் ரஜினிக்கு ஒரு கால் இருக்காது. அதற்காக கட்டையைக் கட்டிக் கொள்வார். அப்படிக் காலில் ஒன்றைக் கட்டிக் கொண்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், காரமடை (கோவை அருகிலுள்ளது) அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் சிரமம் பாராமல் நடித்தார். அடுத்து 'தர்மயுத்தம்'. நான் கதை, வசனம் எழுதிய முதல் படம். ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரம் அது. ஆனால் அவரால் படப்பிடிப்பில் எந்தப் பிரச்னையுமில்லை. படத்தில் பௌர்ணமியன்று ரஜினியைக் கட்டிப் போடுவார்கள். அப்போது அவர் அலறுவார். அது போல் ஒரு காட்சி அடையாறு ஆலமரம் பகுதியில் படமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தயாராக இருந்தபோது ரஜினி வரவில்லை. ரஜினி பிரச்னையில் பாதிக்கப்பட்ட நேரம் அது. படப்பிடிப்பு தொடங்கிய வீடு திருமதி. ரெஜினா வின்சென்ட் என்பவருக்குச் சொந்தமானது. ரஜினி அவர்மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அவரைத் தன் தாயாகவே நேசித்தார். ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமானபின், முதலில் கலந்து கொண்ட படப்பிடிப்பு 'தர்மயுத்தம்'. அதற்கு முன் 'நமக்கு இது முதல் படம். அவர் குணமாகி வருவாரோ, மாட்டாரோ' என்று நான் மட்டுமின்றி, தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசனும் சஞ்சலத்தில் இருந்தார்.ரஜினி படப்பிடிப்புக்கு வந்தபின் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் உதறல் இருந்தது. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று கற்பனையில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ரஜினியிடம் 'ரீ டேக்'கிற்கு கூட தயங்கினார்கள். ஒரு சமயம் டைரக்டர் ஆர்.சி.சக்திக்கு இன்னொரு டேக் தேவைப்பட்டது. அவர் ரஜினியிடம் கேட்கத் தயங்கினார். என்னைத் தூண்டிவிட்டார். நான் ரஜினியிடம் மெதுவாகச் சென்று வேறு விஷயங்களைப் பற்றி பேச்சுக் கொடுத்து கடைசியில் "ஒண்ணுமில்ல. இன்னொரு டேக் எடுத்தா நல்லதுன்னு படுது" என்றேன். "அதனாலென்ன நடிக்கிறேனே" என்றார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவு ரஜினியிடம் உரிமையோடு வேலை வாங்க முடியவில்லை. சண்டைக் காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று அபிப்ராயப்பட்டோம். இதே எண்ணம் ரஜினிக்கும் இருந்தது. படம் முடிந்தபின், "நான் நல்ல நிலையில் இருந்திருந்தால் இன்னும் சரியாகச் செய்திருப்பேனோ?" என்று வருந்தினார். இந்த வருத்தம் ரஜினிக்கு எப்போதும் உண்டு. ஆனாலும் அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது எல்லோருக்குமே மகிழ்ச்சி. மகேந்திரன் இயக்கிய ஜானியில் ஒரு கதாசிரியர் என்ற முறையில் ஸ்டோரி டிஸ்கஷனில் மட்டுமின்றி, படப்பிடிப்பிலும் கலந்து கொள்வேன். 'ஜானி' படத்திற்காக ஊட்டியில் ரஜினி ஓடிய ஓட்டம் இருக்கிறதே, எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்று கணக்கு பார்க்காமல் ஓடியிருக்கிறார். அதற்கு ஒலிம்பிக்கில் ஓடியிருந்தாலும் ரஜினி முதல் பரிசு வாங்கியிருப்பார். ஜானி போலீஸ?க்கு பயந்து ஓடிய பின், பார்பர் வித்யாசாகர் (இதுவும் ரஜினி) ஸ்ரீதேவியிடம் வருவார். ஜானியைப் போல் நடித்து கடைசியில் 'நான் வித்யாசாகர்' என்று அறிமுகம் செய்து கொள்வார். அந்தக் காட்சி முடிந்தபின் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பற்றி சுமார் அரை மணி நேரம் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். "என்ன நடிப்பு..... என்ன நடிப்பு...." என்று ஸ்ரீதேவியை அப்படிப் பாராட்டினார் என்றால், படத்திற்காக டப்பிங் பேசுகையில், வித்யாசாகர் வேடத்தைப் பார்த்துவிட்டு, "அட என்னம்மா நடிக்கிறார் பாருங்க' என்று தன் கேரக்டரையே அவர் ரசித்தபோது, அதைப் பார்த்து நான் ரசித்தேன். 'ஜானி' படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது சில தினங்கள் தொடர்ந்து நள்ளிரவு தாண்டியும் படப்பிடிப்பு நடக்கும். மறுநாள் காலையில் 5 மணிக்கு டப்பிங் வைத்துக் கொள்வார். 7 மணிக்கு அல்லது பாலச்சந்தர் எப்போது அழைத்தாலும் 'தில்லு முல்லு' படப்பிடிப்பிற்குச் செல்வார். அங்கு சென்று வந்தபின் மாலையில் மீண்டும் 'ஜானி' படப்பிடிப்பு. இதற்காக ரஜினியைப் புதுப்பேட்டை கார்டனில் இருந்த வீட்டிற்கு நள்ளிரவில் கொண்டு விடுவது, திரும்ப அதிகாலையில் அழைப்பது எல்லாம் வீட்டுக்காரர்களுக்குச் சிரமமாக இருக்குமென்று, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. ஒரு ஏற்பாடு செய்தார். 'ஜானி' படம் முடியும் வரை பாம்குரோவ் ஓட்டலில் ரஜினிக்கு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டது. நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்குத் திரும்பும் ரஜினி உடைகளை, ஷ?வைக் கூடக் கழற்றாமல் அப்படியே காலை விரித்துக் கொண்டு அசந்து தூங்குவார். தன்னை எழுப்ப வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக கதவைத் திறந்தே வைத்திருப்பார். நான் 4.45க்கு சென்று நிற்பேன். ஒரு நிமிடம் கூட அதிகமாகாது. நான் எழுப்பாமலே எழுந்து நிற்பார் ரஜினி. அது எப்படி என்று ஆச்சர்யப்படுவேன். எழுந்ததும் அவரது உடைகளைக் கழற்ற நானும் உதவுவேன். "என்ன பீட்டர் சார், உங்களுக்கேன் இந்த வேலை?" என்று சங்கடப்படுவார். "உங்க சகோதரனா இருந்து நான் செய்யக் கூடாதா?" என்று கேட்டதும் நெகிழ்ந்து போவார். "ஒரு பதினைந்து நிமிடம் ஷேவிங், குளியல், கடவுளைத் தியானித்தல், இது முடிந்து 5 மணிக்கெல்லாம் ரெடியாகி விடுவேன்" என்பார். சொன்னது போலவே ஷேவிங், குளியல், ராகவேந்திரரை வணங்கிவிட்டு தயாராக நிற்பார். அப்படி ஒரு அசாத்திய வேகம் மட்டுமின்றி, கடுமையான உழைப்பும் அவருக்கே உரித்தானது."
No comments:
Post a Comment